ஞாயிறு, 26 ஜூலை, 2015

Polycystic Ovary Syndrome அறிகுறிகள்





பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ் நோய் அறிகுறிகள் - தெரிந்துகொள்வோம் :-

உலகில் நான்கு பெண்களில் ஒருவருக்கு, 
பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் 
(பி.சி.ஓ.,எஸ்.,) இருப்பதால், குழந்தையின்மை 
பிரச்சனை ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்: இந்த நோய், பெண்களின் 
கருப்பையை தாக்குவதால், வெளியில் 
தெரிவதில்லை. இதனால், ஒழுங்கற்ற 
மாதவிடாய், முடி கொட்டுதல், மன அழுத்தம் 
ஏற்படுதல், எண்ணங்களில் மாற்றம், 
தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் போன்ற 
பிரச்சனைகள் ஏற்படுகின்றன. திருமணமான 
பெண்கள் என்றால், குழந்தையின்மை அல்லது 
பிரசவத்தில் சிக்கல் தோன்றும்.

விளைவுகள்: கர்ப்பத்தின் துவக்கத்திலேயே, 
குறைந்தபட்சம் மூன்று முறையாவது, கரு 
தங்காமல் கலைந்துவிடும்.

கர்ப்பகால சர்க்கரை நோய்: கர்ப்ப காலத்தில் 
ஏற்படும் ஒரு வகை சர்க்கரை நோய். இதற்கு 
உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதால், 
தாய்க்கும், குழந்தைக்கும் எந்த வித பாதிப்பும் 
ஏற்படாது. குழந்தை பிறந்த பின், இந்த நோய் 
மறைந்து விடும். ஒரு சிலருக்கு தொடர 
வாய்ப்புள்ளது.

ரத்த அழுத்தம் அதிகரிப்பு: தாயின், 20வது வார 
கர்ப்பகாலத்தில் திடீரென ரத்த அழுத்தம் 
உயர்வதால், தாயின் சிறுநீரகங்கள், கல்லீரல் 
மற்றும் மூளை பாதிக்கும் அபாயம் உள்ளது.

சிசேரியன் பிரசவம்: பி.சி.ஓ.எஸ்., உள்ள 
கர்ப்பிணிக்கு இயற்கையான பிரசவம் ஏற்பட 
வாய்ப்பில்லை. எனவே, சிசேரியன் மூலம் 
குழந்தை பிறக்கும்போது, தாய்க்கும், 
குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 
திருமணத்திற்கு முன், ஒழுங்கற்ற மாதவிடாய், 
முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைகள் 
இருந்தால், உடனே ஒரு நல்ல டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

பரிசோதனை செய்து, பி.சி.ஓ.எஸ்., இருப்பது 
உறுதியானால், உடனே சிகிச்சையை துவங்க 
வேண்டும். ஒரு சிலருக்கு முறையான 
உடற்பயிற்சி மற்றும் உணவு மூலம் 
சரியாகிவிடும்.

ஒரு சிலருக்கு மாத்திரைகள் மூலமும், 
குழந்தைப் பேறுக்காக காத்திருப்பவர்கள் 
என்றால், ஓவரிகளில் அறுவை சிகிச்சை செய்ய 
வேண்டியிருக்கும். ஒமேகா-3 கொழுப்புள்ள 
உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள 
வேண்டும். ஆயுர்வேதம், அக்குபஞ்சர், யோகா 
மற்றும் பிராணாயாமமும் நோயை 
குணமாக்கும்.

உடற்பயிற்சி மற்றும் உணவு: முறையான 
உணவுப் பழக்கம், தவறாத உடற்பயிற்சி மற்றும் 
நடைபயிற்சியால் எடையை கட்டுக்குள் 
வைத்துக் கொள்வது அவசியம். இன்சுலின் 
மற்றும் ஆன்ட்ரஜன் அளவைக் குறைக்கும் 
பாலீஷ் செய்யப்பட்ட கார்போஹைடிரேட் 
உணவுகளை தவிர்க்க வேண்டும்.

குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சேர்த்துக் 
கொள்வதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் 
அளவு குறையும். இறைச்சி, கொட்டைகள், 
தானியங்கள், உலர் விதைகள், முட்டை, சீஸ், 
ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு, பச்சை கீரைகள், 
முட்டைக்கோஸ், தக்காளி போன்ற அடர்ந்த 
நிறமுள்ள காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் 
கொள்ளவேண்டும்.

சனி, 25 ஜூலை, 2015

குட்பை டயாபடீஸ்!





குட்பை டயாபடீஸ்!

சர்க்கரையை வெல்வது சாத்தியமே!

ஒருகாலத்தில், 'பணக்காரர்களின் வியாதி' 

என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். 

ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் 

இல்லாதவீடே இல்லை என்ற அளவுக்கு 

சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. 

இதை 'வாழ்க்கைமுறை நோய்' என்று கூறுவர். 

சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று 

இல்லை. அப்படியே வந்தாலும் 

தடுத்துவிடலாம். 


நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, 

உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், 

சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை 

முடிவு செய்கின்றன. ஆரோக்கியமான 

வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் 

சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.


கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு 

சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், 

சர்க்கரை நோய் வருவதற்கான 

எல்லைக்கோட்டில் உள்ளனர். 2030-ல் இது 8.7 

கோடியாக அதிகரித்துவிடும் என்று 

கணிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் 

ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டால் 

சர்க்கரை நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை

பெருகிவிட்டதால், இதைச் செய்யுங்கள், அதைச்

செய்யுங்கள் என்று ஒவ்வொருவரும்

தங்களுக்குத் தெரிந்தவகையில்

ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர்.

எதையாவது செய்து நோயைக்

குணப்படுத்திவிட

வேண்டும் என்று மக்களும் இருக்கின்றனர்.

சர்க்கரை நோய் பற்றிய தெளிவான

விவரங்களை டாக்டர்கள் இங்கே

அலசுகின்றனர். இந்தக் கையேடு, சர்க்கரை

நோயின் பிடியிலிருந்து நம்மை காப்பதுடன்,

ஆரோக்கியமான வாழ்வுக்கும் நம்மை

வழிநடத்தும்.

சர்க்கரை நோய் என்றால் என்ன, அதன்

அறிகுறிகள் என்ன என்பது பற்றி முதலில்

சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் கருணாநிதி

பேசுகிறார்.

"நாம் சாப்பிடும் உணவானது, உடலில் உள்ள

திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில்

குளுகோஸாக (சர்க்கரை) மாற்றப்பட்டு

ரத்தத்தில் கலக்கிறது. தவிர, கல்லீரலும்

குளுகோஸை உற்பத்தி செய்கிறது. இந்த

குளுகோஸ், திசுக்களுக்கு ஆற்றல்

அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது.

இந்த குளுகோஸை திசுக்களுக்கு

கொண்டுபோய் சேர்க்கும் பணியை,

இரைப்பைக்கு அருகில் உள்ள கணையம் என்ற

உறுப்பில் சுரக்கப்படும் இன்சுலின் என்ற

ஹார்மோன் செய்கிறது.

ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின்

சுரக்கவில்லை என்றாலோ, அல்லது

சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு

ஆற்றல்கொண்டதாக இல்லை என்றாலோ,

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து

பிரச்னையாகிறது. இதையே 'சர்க்கரை நோய்’

என்கிறோம். வளர்ச்சிதை மாற்ற நோய்களின்

தொகுப்பான இதை, ஒரு 'நோய்' என்று

கூறுவதைவிட, இன்சுலின் சமச்சீரற்ற

நிலையால் ஏற்படும் பாதிப்பு என்று கூறுவது

சரியாக இருக்கும்.

சர்க்கரை நோயானது இதய நோய்கள், பார்வை

இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய்

பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு போன்ற

பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசி ஆகிய

மூன்றும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்.

சர்க்கரை நோயால் மக்கள் அதிக அளவில்

பாதிக்கப்படுவதற்கு உடல் பருமனே முக்கிய

காரணம்.

டைப் 1 சர்க்கரை நோய், டைப் 2 சர்க்கரை நோய்,

கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் என்று

சர்க்கரை நோய் மூன்று வகைகளாகப்

பிரிக்கப்படுகிறது. தவிர சர்க்கரை நோய்க்கு

முந்தைய நிலை என்று ஒரு வகையும் உள்ளது.

இதைப் 'பிரீ டயாபடிஸ்’ என்று கூறுவோம்.

டைப் 1 சர்க்கரை நோய்

நம்முடைய உடலானது, இன்சுலினை 

முற்றிலும் 

சுரக்காத நிலையை டைப் 1 சர்க்கரை நோய் 

என்கிறோம். இது பெரும்பாலும் 

குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. உடலில் உள்ள 

நோய் எதிர்ப்பு சக்தியானது, இன்சுலினை 

சுரக்கும் சுரப்பிகளை 'கிருமிகள்' என்று 

நினைத்து தாக்கி, அழித்துவிடும். இதனால் 

இன்சுலின் சுரப்பு முற்றிலும் தடைபட்டுபோகும். 

இவர்கள், வாழ்நாள் முழுக்க தினமும் 

இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். 

அல்லது இன்சுலின் பம்ப் பொருத்திக்கொள்ள 

வேண்டும்.

டைப் 2 சர்க்கரை நோய்

உலக அளவில் காணப்படும் 90 சதவிகித

சர்க்கரை நோயாளிகள், இந்த வகையைச்

சேர்ந்தவர்கள்தான். இதில் நம் உடல்

இன்சுலினை உற்பத்தி செய்யும். ஆனால் அது

குறைந்த அளவாகவோ, அல்லது தேவையான

ஆற்றல் இல்லாததாகவோ இருக்கும்.

பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு

இந்த வகை சர்க்கரை நோய் வருவதற்கான

வாய்ப்பு அதிகம். இவர்கள், உடல் எடையைக்

குறைப்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத்

தொடர்ந்து கண்காணித்துக் கட்டுக்குள்

வைத்திருப்பது, உணவுக் கட்டுப்பாடு,

உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் மேலும்

பிரச்னை வராமல் தடுக்கலாம்.

கர்ப்பகால சர்க்கரை நோய்

சில பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் 

ஏற்படக்கூடிய சர்க்கரை நோய் இது. சில 

கர்ப்பிணிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் 

அளவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்டும் 

வகையில், அவர்கள் கணையத்தால் 

இன்சுலினைச் சுரக்க முடியாமல் இருக்கும். 

இதை 'கர்ப்பகால சர்க்கரை நோய்' (Gestational 

diabetes) என்கிறோம்.

பெரும்பாலான கர்ப்பகால சர்க்கரை நோயை 

ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாடு, 

உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம். 

வெறும் 10 முதல் 20 சதவிகிதத்தினருக்கே 

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 

மாத்திரை மருந்து தேவைப்படுகிறது. 

பிரசவத்துக்குப் பிறகு இந்தச் சர்க்கரை நோய் 

மறைந்துவிடும்.

கர்ப்பகால சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே 

கண்டறியாவிட்டால், பிரசவ நேரத்தில் 

பிரச்னையை ஏற்படுத்தலாம். வழக்கமாக 

இருக்க வேண்டியதைவிட, அந்த சிசுவின் 

எடையும் அதிகமாக இருக்கலாம்.

பிரீ டயாபடிஸ் (Prediabetes)

சர்க்கரை நோயாளிகள் 6.5 கோடி பேர் 

இருக்கிறார்கள் என்றால், 7.5 கோடிக்கும் 

மேற்பட்ட பிரீடயாபடிஸ் (Prediabetes)நிலையில் 

மக்கள் உள்ளனர். இவர்கள் சர்க்கரை 

நோயாளிகள் இல்லை. ஆனால், மதில் மேல் 

பூனை போல் சர்க்கரை நோய் வரலாம், 

வராமலும் தடுக்கலாம் என்ற நிலையில் 

உள்ளவர்கள்.

இவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 

என்பது 

சராசரிக்கும் (NORMAL)அதிகமாக இருக்கும், 

அதே 

நேரத்தில் சர்க்கரை நோய் என்று குறிப்பிடும் 

அளவுக்குக் குறைவாக இருக்கும். இவர்கள், 

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து 

மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவைக் 

கட்டுப்படுத்தி, சர்க்கரை நோய் வராமல் 

தடுத்துவிட முடியும்.

சர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது?

சாதாரண ரத்த பரிசோதனை

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கணக்கிடுவதன் 

மூலம் சர்க்கரை நோயைக் கண்டறியலாம். 

ஒருவருக்கு ரத்தத்தில் 200 மில்லிகிராம் / டெசி 

லிட்டர் என்ற அளவில் இருந்தால் - அவருக்கு 

சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம். 140 - 

அதற்கு கீழ் இருந்தால் 'இயல்பான நிலை' என்று 

அர்த்தம். ஒருவருக்கு 140-க்கு மேல் சர்க்கரை 

அளவு செல்லும்போது, அவருக்கு சர்க்கரை 

நோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த 

மற்றொரு பரிசோதனைக்குப் 

பரிந்துரைக்கப்படும்.

இதன்படி, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் 

கழித்து 

மீண்டும் ரத்தம் பரிசோதனை செய்யப்படும். 

இதில் 140-க்கும் குறைவாக இருந்தால் அது 

சராசரி. 200-க்கு மேல் இருந்தால் சர்க்கரை 

நோய். இதிலும் குழப்பம் என்றால், 

அடுத்தக்கட்டப் பரிசோதனைக்கு 

பரிந்துரைக்கப்படும்.


ஹெச்பிஏ1சி (HbA1c)பரிசோதனை

நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் 

உள்ளன. குளுகோஸானது இந்தச் சிவப்பு 

அணுவில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்தச் 

ரத்த சிவப்பு அணுக்கள் எட்டு முதல் 12 

வாரங்கள் 


வரை இருக்கும். அதன் பிறகு அவை 
அழிக்கப்படும். இந்தச் ரத்த சிவப்பு அணுவைப் 
பரிசோதனைசெய்வதன் மூலம், எட்டு முதல் 12 
வாரங்களில்ல் ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை 
அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியும். 
பரிசோதனை முடிவில் 6.5 சதவிகிதத்துக்கு 
மேல் 
என்று வந்தால், அவருக்கு சர்க்கரை நோய். 5.7 
முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரை 
நோய்க்கு முந்தைய நிலை. 5.7 
சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால், அது 
இயல்பான அளவு (Normal).

சிலர், சர்க்கரை நோய் ரத்தப் பரிசோதனைக்கு 

ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே சரியான 

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் 

மேற்கொண்டு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் 

கொண்டுவருவர். இவர்களுக்கு பரிசோதனை 

செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு 

சரியாக உள்ளதுபோல தோன்றும். இந்த 

ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்வதன் மூலம், 

மூன்று மாதக் காலத்து சர்க்கரை அளவைக் 

கணக்கிடலாம்.

சர்க்கரை நோய்க்கான காரணிகள்

உடல் பருமன்

டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கு, உடல்

பருமன் மிக முக்கியமானக் காரணம்.

கொழுப்புமிக்க திசுவானது இன்சுலினை ஏற்க

முடியாத நிலைக்கு செல்கிறது.

வயது

45 வயதைக் கடந்தவர்களுக்கும்,

வயதானவர்களுக்கும் சர்க்கரை நோய்

வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

உடற்பயிற்சியைக் குறைத்துக்கொள்வது, எடை

அதிகரிப்பது போன்ற காரணங்களால் இது

ஏற்படுகிறது. இன்றைய வாழ்க்கைமுறை

மாற்றங்கள் காரணமாக, 25 வயதினருக்குக்கூட

சர்க்கரை நோய் வருகிறது.

துடிப்பற்ற வாழ்க்கை முறை

உடற்பயிற்சியின்றி, உட்கார்ந்த அல்லது படுத்த 

நிலையிலேயே இருப்பது, டைப்2 சர்க்கரை 

நோய்க்கு வழிவகுக்கும். துடிப்பான 

வாழ்க்கைமுறையானது உடலில் கொழுப்பு 

சேர்வதைக் குறைக்கிறது, குளுகோஸின் 

பயன்பாட்டை அதிகரிக்கிறது.

மரபியல்

குடும்பத்தில் பெற்றோருக்கு சர்க்கரை நோய் 

இருந்தால் பிள்ளைகளுக்கும் சர்க்கரை நோய் 

வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பெற்றோருக்கு 

இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், 

அவர்களின் பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் 

வர 80-90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. 

பெற்றோரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் 

இருந்தால், பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் 

வருவதற்கான வாய்ப்பு 60 சதவிகிதமாக 

உள்ளது.

மன அழுத்தம் (Stress)

இன்றைய இளைஞர்களுக்கும்கூட சர்க்கரை 

நோய் வருவதற்கு மன அழுத்தம் மிக முக்கியக் 

காரணமாக இருக்கிறது. நம் உடலில், கவுன்டர் 

ரெகுலேட்டரி ஹார்மோன்ஸ் (counter regulatory 

hormones)என்று சில ஹார்மோன்கள் உள்ளன. 

இதில் முக்கியமானது கார்டிசால் (cortisol). மன 

அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த கார்டிசால் 

அளவு அதிகமாக இருக்கும். இன்சுலின் 

செயல்பாட்டைக் குறைக்கும்.

சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்

சர்க்கரை நோயைத் தெரிந்துகொள்ளுதல்:
சர்க்கரை நோய் வராமல் எப்படித் தடுக்க 

வேண்டும் என்பதை, முதலில் தெரிந்துகொள்ள 

வேண்டும். இதுபற்றி முழுமையாகப் 

புரிந்துகொண்டால் மட்டுமே அதைத் 

தடுப்பதற்கான முயற்சியில் முழுமையாக 

ஈடுபட முடியும்.

உணவு கட்டுப்பாடு:

அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் 

சமைக்கப்பட்ட உணவின் அளவைக் 

குறைத்துக்கொள்ளுங்கள். அரிசி சாதத்தை 

குறைத்து அதற்குப்பதில், ஒரு கப் காய்கறி 

அல்லது பழங்களைச் சாப்பிடுங்கள். 

சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் 

அருந்துங்கள். இது உங்கள் பசியைக் குறைத்து, 

உணவு எடுத்துக்கொள்ளும் அளவைக் 

குறைக்கும். உணவில் 40 முதல் 50 சதவிகிதம் 

அளவுக்கு மாவுச் சத்தும், 20 சதவிகிதத்துக்கு 

புரதச் சத்தும், 20 சதவிகிதத்துக்குக் கொழுப்புச் 

சத்தும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். 

மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதில், அதை 

ஐந்து அல்லது ஆறு சிறிய பகுதி களாகப் 

பிரித்துச் சாப்பிடுங்கள்.

நார்ச் சத்து உணவு:

தினசரி உணவில் நார்ச் சத்து அதிக அளவில்

இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இது,

உங்களின் செரிமான மண்டலம் சிறப்பாக

செயல்பட உதவும். டைப் 2 சர்க்கரை நோய்

வருவதில் இருந்து பாதுகாக்கும்.

ஒரு நாளைக்கு குறைந்தது 25 முதல் 30 கிராம்

அளவுக்கு நார்ச் சத்துள்ள உணவை

எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் ரத்தத்தில்

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க

உதவும்.
துடிப்பான வாழ்க்கைமுறை:

உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவர்கள் 

இனியாவது தினமும் உடற்பயிற்சி செய்யத் 

தொடங்குங்கள். தினமும் உடற்பயிற்சி அல்லது 

நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் 

ஆரோக்கியமான எடையைப் பெறுவதுடன், 

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் 

வைத்திருக்க முடியும். தினமும் குறைந்தது 30 

நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் 

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் 

வைக்கலாம். எளிய பயிற்சிகள் செய்தாலே 

போதுமானது. உடற்பயிற்சி செய்ய 

முடியவில்லை என்றால், குறைந்தது நடைப் 

பயிற்சியாவது செய்யலாம்.

எடைக் குறைப்பு:

உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை (பி.எம்.ஐ.) 

உள்ளதா என்பதை முதலில் 

கண்டறியவேண்டும். பி.எம்.ஐ. அளவு 18.5-க்கு 

கீழ் இருந்தால் சராசரி எடையைவிடக் குறைவு. 

18.5 முதல் 24.9 வரை இருந்தால் அது சராசரி. 25 

முதல் 29.9 வரை இருந்தால் உடல் எடை அதிகம், 

30-க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்று 

அர்த்தம். உங்கள் பி.எம்.ஐ. அளவு எப்போதும் 

18.5 

முதல் 24.9-க்குள் இருக்கும்படி 

பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் குறைக்கும் 

ஒவ்வொரு கிலோ எடையும் உங்களுக்கான 

சர்க்கரை நோய் வாய்ப்பை மட்டுமல்ல, இதய 

நோய், உயர் ரத்த அழுத்தத்துக்கான வாய்ப்பைக் 

குறைக்கும்.

காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்:

காலை 7 மணி, மதியம் 12 மணி மற்றும் இரவு 7 

மணிக்கு, நம்முடைய உடலின் வளர்ச்சிதை 

மாற்ற விகிதம் (மெட்டபாலிசம் ரேட்) உச்சத்தில் 

இருக்கும். இந்த நேரத்தில் சாப்பிடும்போது 

கூடுதல் உழைப்பு இன்றியே 500 கலோரி 

வரையிலான ஆற்றல் எரிக்கப்படும். இதனால் 

உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்.

கொழுப்புச் சத்துள்ள உணவைத் தவிர்க்க 

வேண்டும்:

துரித உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்களில் அதிக 

அளவில் கொழுப்பு உள்ளது. இந்த உணவு 

வகைகளில் கெட்டக் கொழுப்பும் அதிகமாக 

இருப்பதால், உடலில் கொலஸ்ட்ராலின் 

அளவை அதிகரித்துவிடும். மேலும், இது 

ரத்தத்தில் சர்க்கரை அளவையும் பாதிக்கும். 

இதுபோன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு, 

எண்ணெய் குறைவாக வீட்டில் சமைத்த 

உணவையே சாப்பிடுங்கள். மாதத்துக்கு 

ஒருமுறை வெளியில் சாப்பிடுவது தவறு 

இல்லை. சாப்பிட்டதும் அந்தக் கலோரிகளை 

செலவிடும் வகையில் ஏதேனும் பயிற்சியில் 

ஈடுபடுவது அவசியம்.

சர்க்கரை அதிகம் உள்ள பானங்களைத் 

தவிர்த்துவிடுங்கள்

தாகமாக இருக்கிறது என்றால், தண்ணீர், பால், 

மோர், இளநீர் போன்றவற்றைப் பருகலாம். 

அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பழச்சாறு 

அருந்தலாம். சோடா, குளிர்பானங்கள், எனர்ஜி 

டிரிங்ஸ் போன்றவற்றில் அதிக அளவில் 

சர்க்கரை உள்ளது. இந்த இனிப்புமிக்க 

பானங்கள், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை 

அளவை 


அதிகரிக்கச் செய்யும் என்பதால் - இதைத் 

தவிர்த்துவிடுங்கள்.

சைவ உணவு நல்லது

அசைவ உணவுகள் என்னதான் சுவையானது

என்றாலும், அதைத் தினமும்

எடுத்துக்கொள்ளாதீர்கள். இது சர்க்கரை

நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

அதற்குப்பதில் அதிக அளவில் பச்சைக்

காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது

உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்,

தாது உப்புக்களை அளிப்பதுடன், சர்க்கரை

நோய்

வராமலும் காப்பாற்றும்.

மன அழுத்தம் வேண்டாம்

அதிக அளவிலான மன அழுத்தம் உங்கள் 

ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் 

செய்கிறது. எனவே, யோகா, உடற்பயிற்சி, 

தியானப் பயிற்சி மூலம் உங்கள் மன அழுத்த 

அளவைக் குறையுங்கள்.

தொடர் மருத்துவப் பரிசோதனை

சர்க்கரை நோய், சத்தமின்றி வரக்கூடியது. 

இதன் 

அறிகுறிகளை பெரும்பாலானவர்கள் உணர்வது 

இல்லை. எனவே இதை 'சைலன்ட் கில்லர்’ 

என்பர். எனவே, குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு 

முறை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் 

கண்டறியும் ரத்தப் பரிசோதனை 

செய்துகொள்ளுங்கள். இந்தப் 

பரிசோதனையானது ப்ரீடயாபடிஸ் உள்ளதா 

என்பதைக் கண்டறிய உதவும். சர்க்கரை நோய் 

வராமல் தடுக்கும்.

க்ரீன் டீ பருகுங்கள்

தினமும் க்ரீன் டீ பருகுவது உங்கள் உடலில் 

உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். இதில் 

உள்ள ஆன்டிஆக்சிடன்ட் ரத்தத்தில் உள்ள 

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க 

உதவுவதுடன், சர்க்கரை நோய் வராமல் காக்கும்.


புகை மதுப் பழக்கத்தைக் கைவிடுங்கள்

புகைப்பிடிக்கும் நேரத்தில் ரத்த அழுத்தம் 

தற்காலிகமாக அதிகரிக்கும். சிகரெட் புகைப்பது 

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தத்தை 

அதிகரிக்கிறது. ஆக்சிஜன் அளவைக் 

குறைக்கிறது. இதயத் தசைகளைப் பாதிக்கிறது. 

அதேபோல, மதுப் பழக்கமும் சர்க்கரை மற்றும் 

உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்ப்போம்

இன்றைக்கு உடனடி உணவு என்பது தவிர்க்க

முடியாததாகிவிட்டது. பாக்கெட்டில்

அடைக்கப்பட்ட நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப்

பொருட்களைக்கொண்டு விரைவாக சமைத்துச்

சாப்பிடும் பழக்கம் இன்று அதிகமாக உள்ளது.

இந்த உணவுகள் சுவையாக, பார்க்க நல்ல

நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில்

சேர்க்கப்படும் பொருட்கள் சர்க்கரை நோய்,

உயர்

ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைக்கு

வழிவகுத்துவிடுகிறது. ஆனால், வீட்டிலேயே

உணவுகளைத் தயாரித்து சாப்பிடும்போது,

அதில்

நாம் என்ன சேர்க்கிறோம், எவ்வளவு

சேர்க்கிறோம், அவை ஆரோக்கியமானதுதானா

என்பதை நாம் அறிவோம். வீட்டில் சமைத்த

உணவுகளைச் சாப்பிடுவது சர்க்கரை மற்றும்

உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும்.

இதுவரை சர்க்கரை நோய் வராமல் தடுக்க

வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பார்த்தோம்.

இனி, சர்க்கரை நோய் வந்தால், அவர்களுக்கு

எந்த மாதிரியான பிரச்னைகள் வரும், அதை

எப்படி எதிர்கொள்வது என்பதைப் பார்க்கலாம்.

பாதிப்புகள்

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் 

வைத்திருக்காவிட்டால், அது கண், கால், 

சருமம், 

இதயம், பல் ஈறுகள், நரம்பு மண்டலம், சிறுநீரக 

செயலிழப்பு, நரம்பு மண்டல பாதிப்பு என்று 

உடலின் பல்வேறு பகுதிகளைப் பாதிக்கும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள்

டாக்டர் விஜயகுமார், சிறுநீரகவியல் மருத்துவர்


"ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக 

இருந்தால், அது சிறுநீரகத்தைப் பாதித்து ஒரு 

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சிறுநீரக 

செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும். சர்க்கரை 

நோயால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதை 

'டயாபடிக் நெப்ரோபதி' (Diabetic nephropathy). 

என்போம்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு


அதிகரிக்கும்போது, சிறுநீரகமானது கூடுதலாக

வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் கூடுதல் பளு காரணமாக, தன்

செயல்பாட்டையே நிறுத்திவிடுகிறது.

நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு

முன்பே இந்தப் பிரச்னை தொடங்கிவிடுகிறது.

ஆரம்ப கட்டத்தில் சிறுநீருடன் புரதம்

வெளியேறும். இதை, சிறுநீர் பரிசோதனை

செய்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே

கண்டறியலாம். அவ்வப்போது ரத்தப்

பரிசோதனை செய்வதன் மூலம் சிறுநீரகத்தின்

செயல்பாட்டைக் கண்டறிந்து ஆரம்ப

நிலையிலேயே சரிப்படுத்தலாம்.

சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பது,

மாத்திரை- மருந்துகளை எடுத்துக்கொள்வது,

ஆரோக்கிய உணவுப்பழக்கவழக்கம் ஆகியவை

மட்டுமே சர்க்கரை நோயால் சிறுநீரகம்

பாதிக்காமல் இருக்க வழியாகும்."

பல் ஈறுகளில் ஏற்படும் பிரச்னை

டாக்டர் எம்.எஸ்.ரவி வர்மா, பல் மருத்துவர்

"சர்க்கரை நோயால் கண், சிறுநீரகம், பாதம் 

ஆகியவை பாதிக்கப்படுவதைப் போன்று 

அதிகம் 

பாதிக்கப்படுவது ஈறுகள்தான். சர்க்கரை நோய் 

அதிகரிக்கும்போது, பல் ஈறுகள் பலவீனம் 

அடைந்து பல் ஆடுதல் பிரச்னை ஏற்படும். 

பல்லுக்கும் ஈறுக்கும் இடையே சிறிய 

வாய்க்கால் போன்ற அமைப்பு உள்ளது. இது, 1.2 

மி.மீ. அளவுக்கு ஆழமாக இருக்கும். இங்குதான் 

பற்களைப் பாதுகாக்கும் திரவம் சுரக்கிறது. 

பற்களில் உணவுத் துகள்கள், காரை 

படியும்போது ஈறு பாதிக்கப்படும். பல்லையும் 

எலும்பையும் இணைக்கும் தொடர்பு 

துண்டிக்கப்படும். இந்த ஆழமானது 3 முதல் 4. 

மி.மீ. அளவுக்கு ஆழமாவதை 'கம் பாக்கெட்’ 

என்று சொல்வோம். இந்த பாக்கெட்டில் நோய்த் 

தொற்று ஏற்படும்போது அது சர்க்கரை நோயின் 

பாதிப்பையும் அதிகரிக்கிறது. எனவே, பல்லில் 

நோய்த் தொற்று வராமல் பாதுகாப்பது மிகவும் 

அவசியம்.
தினந்தோறும் இரண்டு முறை பல் துலக்க 

வேண்டும். பற்களுக்கு இடையில் உள்ள 

அழுக்கை அகற்ற 'ஃபிளாசிங்' மற்றும் 'இன்டர் 

டென்டல் பிரஷ்ஷிங்' செய்ய வேண்டும். ஆறு 

மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை 

அணுகி பரிசோதனை செய்துகொள்ள 

வேண்டும்."

காலில் ஏற்படும் பாதிப்புகள்

டாக்டர் சரவணன், வாஸ்குலர் மற்றும் 

டிராஸ்பிளான்ட் சர்ஜன்

"சர்க்கரை நோயாளிகளுக்கு டயாபடிக் 

நியோரோபதி (Diabetic neuropathy) காரணமாக 

அழுத்தத்தைத் தாங்கக்கூடிய கால் பகுதியில் 

அடிக்கடி புண் ஏற்படும். ஒவ்வொரு ஆறாவது 

சர்க்கரை நோயாளிக்கும் பாதப் புண் பிரச்னை 

ஏற்படுகிறது. இதனால் கால் துண்டிக்கும் 

அளவுக்குப் பிரச்னை செல்கிறது. உலக அளவில் 

கால் துண்டிப்பு செய்வதற்கு, 85 சதவிகிதம் 

அளவுக்கு பாதங்களில் ஏற்படும் புண்ணே 

காரணமாக உள்ளது.

கால்களை தினசரி கவனித்தல்: 

வெட்டுக்காயங்கள், வெடிப்புகள், 

கொப்புளங்கள், 

சிவந்துபோய் இருத்தல், வீக்கம், நகங்களில் 

பிரச்னை உள்ளதா என்பதை தினசரி கவனிக்க 

வேண்டும். கண்ணாடி உதவியுடனோ அல்லது 

அடுத்தவர் உதவியுடனோ அடிப்பாதங்களைப் 

பார்க்க வேண்டும். ஏதேனும் வித்தியாசமாக 

இருந்தால், உடனடியாக டாக்டரை அணுக 

வேண்டும்.

அன்றாடம் கால்களைக் கழுவி சுத்தமாக 

வைத்துக்கொள்ள வேண்டும். மிதமான 

வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். கால்களை 

மென்மையான துணி அல்லது பஞ்சு வைத்து 

கழுவ வேண்டும். அழுத்தமாகத் துடைக்காமல் 

ஒற்றிஒற்றி ஈரத்தை எடுக்க வேண்டும். கால் 

விரல்களுக்கு இடையே ஈரம் இல்லாமல் 

பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெறும் காலுடன் நடக்கக் கூடாது. வீட்டில்கூட 

செருப்பு அணிந்து நடக்க வேண்டும். புகை 

பிடிக்கக் கூடாது. இதனால், கால்களில் ரத்த 

ஓட்டம் குறையும்."

கண்ணில் ஏற்படும் பாதிப்புகள்

டாக்டர் திரிவேணி, கண் நோய் சிகிச்சை நிபுணர்



"சர்க்கரை நோயாளிகளுக்கு "கண் புரை நோய், 
குளுக்கோமா மற்றும் விழித்திரை பாதிப்புகள் 
ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை 
நோயாளிகளிடம் மிகச் சாதாரணமாகக் 
காணக்கூடியது டயாபடிக் ரெட்டினோபதி. 
பார்வை இழப்புக்கான முன்னணிக் 
காரணங்களில் இதுவும் ஒன்று. விழித்திரையில் 
உள்ள ரத்த நாளங்களில் மாற்றம் ஏற்படுத்தும் 
நோய் இது. கண்ணுக்குள் ரத்த நாளங்கள் 
வீங்கி, 
திரவம் கசியத் தொடங்கும். காலப்போக்கில் 
விழித்திரையில் ரத்த ஓட்டத்தைக் 
கடுமையாகப் 
பாதிக்கும். ரத்தத்தை எடுத்துச் செல்லும் 
தமனிகள் மற்றும் சிரைகள் பலவீனமடைந்து 
பழுதடையும்.

ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது.

கவனிக்காமல் விட்டால் பார்வை

பறிபோய்விடும். பார்வை ஆரம்பத்தில் சிறிது

மங்கலாகத் தெரியும், திடீரென பார்வை போதல்,

ஒளியைச் சுற்றி வட்டங்கள் தெரிதல், கண்

கூசுதல் போன்றவையும் ஏற்படலாம்.

'மாக்யுலா' என்பது கண்ணில் துல்லியமான,

நேரடியான பார்வை ஏற்படும் பகுதி. இந்தப்

பகுதியில் கசியும் திரவம் மாக்யுலாவை வீங்கச்

செய்யும். இதனால் பார்வை மங்கலாகும். இந்த

நிலையை மாக்யுலர் எடிமா என்கிறோம்.

டயாபடிக் ரெட்டினோபதி உள்ளவர்களுக்கு

எந்தக் கட்டத்திலும் இந்த நிலை ஏற்படலாம்.

இதைத் தவிர்க்க நோயாளிகள் ஆறு

மாதங்களுக்கு ஒருமுறை கண்களைப்

பரிசோதித்துக்கொள்ளவேண்டும். ரத்தத்தில்

உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்

வைத்தும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்

வைத்திருப்பதும் பார்வைக் கோளாறுகள்

ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்."

சர்க்கரை நோய் சில சந்தேகங்கள்

சந்தேகம் 1: சர்க்கரையை அதிகம் 

சாப்பிடுவதால் 

சர்க்கரை நோய் வரும்.

நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவும் 

சர்க்கரையாக (குளுகோஸாக) 

மாற்றப்படுகிறது. 


எனவே, என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு 

சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதிக 

அளவில் சாப்பிடும்போது கூடுதல் கலோரிகள், 

அதாவது உங்கள் உடலுக்கு தேவையில்லாத 

ஆற்றல் கிடைக்கிறது. இந்தக் கூடுதல் 

கலோரிகள் கொழுப்பாக 

சேமித்துவைக்கப்படுகிறது. இதனால் 

உடல்பருமன் ஏற்படும். இது பிற்காலத்தில் 

சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

சந்தேகம் 2: சர்க்கரை நோயாளிகள் 

பிரத்யேகமான சர்க்கரை நோய் சிறப்பு 

உணவுகள் எடுக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கென தனியே சமைக்க 

வேண்டும் என்று இல்லை. அவரவருக்கு ஏற்ற 

ஆரோக்கியமான டயட் பின்பற்றினால் 

போதுமானது. சர்க்கரை நோயாளிகளுக்கு 

என்று 

பிரத்யேகமான உணவு ஏதும் இல்லை. சர்க்கரை 

அளவை அதிகரிக்காத எந்த உணவையும் 

எடுத்துக்கொள்ளலாம்.

சந்தேகம் 3: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு,

சாக்லேட் சாப்பிடக் கூடாது.

தினசரி உணவு அட்டவணைக்கு உட்பட்டு

அல்லது போதுமான உடற்பயிற்சி செய்பவர்கள்

இனிப்பு வகைகளை சாப்பிடலாம்.

ஆரோக்கியமான உணவு அத்தனைக்கும் தீர்வு!

ர்க்கரை நோயாளிகளுக்கான உணவு 

முறைகளை பட்டியலிடுகிறார், டயட்டீஷியன் 

லட்சுமி.

"சர்க்கரை நோயாளிகள் சகிக்க முடியாத 

அளவுக்கோ அல்லது விருந்து போன்ற 

உணவையோ உட்கொள்ளக் கூடாது. 

பிரத்யேகமான உணவுப் பழக்கத்தை 

பின்பற்றினாலே போதும். ரத்தத்தில் சர்க்கரை 

அளவு அதிகரித்தாலோ, அல்லது 

குறைந்தாலோ 

நீங்கள் சரியான மாத்திரை மருந்து மற்றும் 

உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்று 

அர்த்தம்.

நாம் உட்கொள்ளும் உணவு விரைவாக 

செரிமானமாகி ரத்தத்தில் சர்க்கரை அளவை 

அதிகரிக்கும். இந்த உணவுகளை 'ஹை 

கிளைசமிக் (High glycemic) உணவுகள்' என்போம். 

இத்தகைய உணவுகளை குறைவாக 

எடுத்துக்கொள்ள வேண்டும். குறைவான 

கிளைசமிக் உணவு என்பது சமைக்கப்படாதது, 

அதிக நார்ச் சத்து மிக்கது.

தவிர்க்க வேண்டியவை:

சர்க்கரை மற்றும் ஹை கிளைசமிக் 

உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதாவது, 

சர்க்கரை, இனிப்பு வகைகள், தேன், ஜாம், 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஊட்டச்சத்து 

பானங்கள், குளிர்பானங்கள், கார்பனேட்டட் 

பானங்கள், பிஸ்கட், மைதாவில் 

தயாரிக்கப்படும் 


கேக், பிரெட், பன், பீட்சா, பர்கர் போன்றவை.
இதேபோல, கொழுப்பு அதிகம் உள்ள 

வெண்ணெய், சீஸ், டால்டா, முட்டை மஞ்சள் 

கரு, நண்டு, இறால், ஆடு, மாட்டு இறைச்சி, 

மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற இறைச்சி 

வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள 

வேண்டியவை:

தேங்காய், எள், முந்திரி மற்றும் நெய், 

உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு, 

மரவள்ளிக் 

கிழங்கு.
10 நாட்களுக்கு ஒருமுறை என்ற அளவில் 

வாழைப் பழம் (பாதி அளவு), சப்போட்டா (1), 

மாம்பழம் (1-2 துண்டுகள்), சீத்தா பழம் (1), உலர் 

பழங்கள் (4-5) எடுத்துக்கொள்ளலாம்.

அசைவம் சாப்பிடுபவர்கள், வாரத்துக்கு இரண்டு 

முறை தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி (80 

கிராம்) அல்லது மீன் (100 கிராம்) 

எடுத்துக்கொள்ளலாம்.

எடுத்துக்கொள்ள வேண்டியவை:
தினசரி குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள 

வேண்டிய பழங்களை, பழச்சாறாக இல்லாமல் 

கடித்து சாப்பிட வேண்டும்.

ஆப்பிள், கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, 

ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நாவல் பழம், 

பேரிக்காய், அத்தி, மாதுளை, தர்பூசணி ஆகிய 

பழங்களை குறைந்த அளவில் 

எடுத்துக்கொள்ளலாம்.

இது வெறும் ஆலோசனைக்குதான். 

ஒவ்வொருவரின் வயது, செயல்பாடு, எடை, 

இதர 

நோய்களைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். 

எனவே, உங்கள் டாக்டர் மற்றும் 

டயட்டீஷியனின் ஆலோசனையைப் பெறுவது 

நல்லது.

ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கம், 

உடற்பயிற்சி, மருந்து - மாத்திரைகளை சரியாக 

எடுத்துக்கொள்வது, குறிப்பிட்ட காலத்துக்கு 

ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என்று 

இருந்தால் சர்க்கரை நோய் வராமல் 

தடுக்கலாம்; வந்தாலும் அதை வெற்றிகரமாக 

எதிர்கொள்ள முடியும்."

வீட்டில் உள்ளது எளிய தீர்வு!

சர்க்கரை நோய் குறித்து ஆயுர்வேத மருத்துவர்

டாக்டர் கௌதமன் கூறுகையில், "மெள்ள

மெள்ள உயிரைக் குடிக்கும் சர்க்கரை நோயை,

ஆயுர்வேதத்தில் 'பிரமேகம்' என்று சொல்வோம்.

நோயின் மூலக்காரணம், நோயின் விளைவு,

நோயல் ஏற்படும் உடல் மற்றும் செயலில்

மாறுபாடுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த

நோயை 20 வகைகளாகப் பிரிக்கலாம். உணவுக்

கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உடல் உழைப்பை

அதிகரித்தல் மூலம் சர்க்கரை நோயாளிகளும்

மற்றவர்களைப் போல ஆரோக்கியமான

வாழ்க்கை முறையை வாழ முடியும். உணவில்

கறிவேப்பிலை, மஞ்சள், கொத்துமல்லி, பூண்டு,

சீரகம், கருஞ்சீரகம், வெந்தயம் போன்றவற்றை

அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்"

என்றவர்,

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்

வைத்திருக்க உதவும் சில உணவுப்

பொருட்களைப் பட்டியலிட்டார். இவற்றை

டாக்டர்களின் ஆலோசனையின்படி

எடுத்துக்கொள்ள வேண்டும் என்று

கண்டிப்புடன்

கூறுகிறார் டாக்டர் கௌதமன்.

நாவல்

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முக்கிய 

மூலிகை, நாவல். நாவல் மரத்தின் இலை, பழம், 

விதை என ஒவ்வொரு பகுதியும் சர்க்கரை 

நோயாளிகளுக்கு உதவியாக உள்ளது. நாவல் 

பழம் எப்போதெல்லாம் கிடைக்கிறதோ, அதை 

உங்கள் உணவில் ஒரு பகுதியாக 

மாற்றிக்கொள்ளுங்கள். இந்தப் பழமானது 

கணையத்துக்கு மிகவும் நல்லது. பழத்தின் 

விதையை காயவைத்து பொடித்து 

வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை 

தினமும் இரண்டு வேளை தண்ணீரில் கலந்து 

குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு 

கட்டுக்குள் இருக்கும்.

பாகற்காய்

தினமும் பாகற்காய் சாற்றை வெறும் வயிற்றில் 

குடிப்பதும், வாரத்துக்கு இரண்டு-மூன்று 

நாட்களுக்கு பாகற்காயை உணவில் 

சேர்த்துக்கொள்வதும் சர்க்கரை நோயைக் 

கட்டுக்குள் வைத்திருக்க உதவும். பாகற்காயின் 

விதையை நீக்கிவிட்டு, அதனுடன் தண்ணீர் 

சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி அப்படியே 

குடிக்க வேண்டும்.

வெந்தயம்

சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்

மற்றோர் உணவுப் பொருள் வெந்தயம்.

முந்தைய நாள் இரவில் ஒரு டம்ளர் நீரில்

இரண்டு ஸ்பூன் வெந்தயத்தைப்போட்டு

ஊறவிட

வேண்டும். அடுத்த நாள் காலையில், இந்த

வெந்தயம் மற்றும் தண்ணீரை வெறும்

வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து

இதைச்

செய்துவந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு

தானாக குறையும். இதனுடன் பாலில் இரண்டு

ஸ்பூன் அளவுக்கு வெந்தயப் பொடியைச் சேர்த்து

பருகுவதும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்

வைத்திருக்க உதவும்.

கொய்யா

இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி 

மற்றும் நார்ச் சத்தானது ரத்தத்தில் சர்க்கரை 

அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 

இருப்பினும், கொய்யாவைத் தோலுடன் சேர்த்து 

சாப்பிடும்போது அது சர்க்கரை அளவை 

அதிகரித்துவிடுவதாக ஆய்வுகள் 

தெரிவிக்கின்றன. எனவே, தோலை நீக்கிவிட்டு 

சாப்பிடலாம். அதற்காக அதிக அளவில் 

கொய்யா சாப்பிடுவது ஏற்றதும் இல்லை.

நெல்லிக்காய்

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 

இந்திய மருத்துவ முறைகளில் பெருமளவில் 

பயன்படுத்தப்படுவது, அரை நெல்லிக்காய். 

இதில் அதிக அளவில் வைட்டமின் சி 

இருப்பதால், நெல்லிக்காயை அரைத்து அதன் 

சாற்றைக் குடிப்பது கணையத்தைத் தூண்டும். 

இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து, அதன் 

விதையை அகற்றிவிட்டு அரைத்து சாறு 

எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு டீஸ்பூன் 

அளவு சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து 

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒருநாள் 

பாகற்காய் சாறு, ஒருநாள் நெல்லிக்காய் சாறு 

என்று குடிக்கலாம். இதைத் தொடர்ந்து 

செய்துவந்தால் சர்க்கரையை நாம் கட்டுக்குள் 

வைக்கலாம்.

பட்டை

உணவில் சேர்க்கப்படும் 'பட்டை'யைப் பொடி

செய்துகொள்ள வேண்டும். நான்கு டீஸ்பூன்

பட்டைப் பொடிக்கு, நான்கு டம்ளர் தண்ணீர்

சேர்க்க வேண்டும். இதை, குறைந்த அளவு

வெப்பத்தில் அரை மணி நேரம் கொதிக்கவிட

வேண்டும். பட்டையில் உள்ள ரசாயனம் நீரில்

நன்கு கலந்துவிடும். இந்த நீரை ஆறவைத்து

அருந்தினால் சர்க்கரை, கட்டுக்குள் இருக்கும்.

பூண்டு

பூண்டில் 400-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் 

உள்ளன. இதன் பலன்கள் அளவற்றது. 

சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் 

ஆற்றல் பூண்டுக்கும் உள்ளது. சர்க்கரை 

நோயாளிகள் மருந்துகளுடன், அவர்களுக்கான 

பிரத்யேக உணவில் பூண்டையும் 

சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள சில 

ரசாயனங்கள், இன்சுலின் சுரப்பை 

அதிகரிக்கிறது. கல்லீரலானது இன்சுலினின் 

ஆற்றலை குறைப்பதைத் தவிர்த்து, உடலுக்குப் 

போதிய அளவு இன்சுலின் கிடைக்கச் செய்கிறது.

சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு:

சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தத்தில் 

சர்க்கரை 

அளவு அதிகரித்தல் அல்லது சர்க்கரை அளவு 

குறைதல் என்று இரண்டுவிதமான பிரச்னைகள் 

ஏற்படலாம்.

ஏன் அப்படி ஏற்படுகிறது எனவும், சர்க்கரை 

நோயாளிகளின் குடும்பத்தார் கவனிக்க 

வேண்டிய விஷயங்கள் குறித்தும் சர்க்கரை 

நோய் சிறப்பு மருத்துவர் கே.பரணிதரன் 

விளக்குகிறார்.

"ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது மட்டும் 

பிரச்னை இல்லை. சர்க்கரை அளவு 

குறைவதுகூட பிரச்னையை ஏற்படுத்தும். 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 

அதிகரிக்கும்போது, அதைக் கட்டுப்படுத்த 

மருந்துகள் எடுக்கப்படும்.

டைப் 1 சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் 

எடுத்துக்கொள்வார்கள். இது ரத்தத்தில் 

சர்க்கரை அளவைக் குறைத்துவிடும். இப்படி 

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை 

'ஹைபோகிளைசீமியா' (Hypoglycemia) என்போம்.

இதுதவிர, மது அருந்துதல், சாப்பிடாமல் 

இருப்பது போன்றவையும் ரத்தத்தில் சர்க்கரை, 

அளவைக் குறைக்கும். சர்க்கரை நோயுடன், 

சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களுக்கு, 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதற்கான 

வாய்ப்பு அதிகம்.

சர்க்கரை அளவு குறையும்போது சோர்வு, 

வியர்த்தல், நெஞ்சு படபடப்பு, பசி, மயக்கம், 

இயல்பாக இருக்க முடியாத நிலை ஏற்படலாம். 

இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, சர்க்கரை 

நோயாளிகள் இன்சுலின் 

எடுத்துக்கொள்ளும்போது, சரியான நேரத்துக்கு 

சாப்பிட வேண்டும். அப்படி சரியான நேரத்துக்கு 

சாப்பிட முடியாத சூழ்நிலையில் இருந்தால், 

பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை சிறிது 

எடுத்துக்கொள்ளலாம். சரியான நேரத்தில் 

சாப்பிட முடியாதவர்கள் ஹைபோகிளைசீமியா 

வராமல் தடுக்க டெக்ட்ஸ்ட்ரோஸ் 

(dextrose)என்ற 

மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். இந்த 

மாத்திரையைப் போட்டுக்கொண்டு 

சூழ்நிலையைச் சமாளித்துவிட்டு, விரைவாக 

வந்து சாப்பிட வேண்டும்.

சர்க்கரை அளவு 70-க்கு கீழ் சென்று, மேலே 

சொன்ன அறிகுறிகள் தோன்றினால், அவர்கள் 

உடனடியாக சர்க்கரை, சாக்லேட், பிஸ்கட் என, 

உடனடியாக சர்க்கரை அளவை உயர்த்தும் 

உணவுப் பொருள் எதையாவது சாப்பிட 

வேண்டும். அவரால் சாப்பிட முடியாத அளவுக்கு 

நிலைமை சென்றால், அருகில் உள்ளவர்கள் 

சர்க்கரை நீர், ஜூஸ் போன்றவற்றை 

அளிக்கலாம்.

டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் 

சர்க்கரையின் அளவு குறையும் பிரச்னை 

பெருமளவு வராது. ஆனால், இவர்கள் காய்ச்சல் 

போன்ற உடல் நலக் குறைவு நேரத்தில் 

வழக்கமான 'டோஸ்' எடுத்துக்கொள்ளலாமா, 

அல்லது குறைவான 'டோஸ்' 

எடுத்துக்கொள்ளலாமா என்று டாக்டரிம் கேட்டு, 

அதன்படி மாத்திரை எடுத்துக்கொள்ள 

வேண்டும். இந்தச் சர்க்கரை நோயாளிகள் 

சிகிச்சைமுறையை சரியாகப் பின்பற்றவில்லை 

எனில், அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை 

அளவானது 300-க்கு மேல் சென்றுவிடும். இதை 

'ஹைபர்கிளைசீமியா'(Hyperglycemia)என்போம். 

இவர்களுக்கும் ஹைபோகிளைசீமியா 

போலவே 

மயக்கம், குழப்பம் போன்ற அறிகுறிகள் 

இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், 

உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு 

கொண்டுசென்று சிகிச்சை பெற வேண்டியது 

அவசியம்.

ஒருவருக்கு சர்க்கரையின் அளவு 

அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பதை 

தெரிந்துகொள்ள, ஒவ்வொரு சர்க்கரை 

நோயாளியின் வீட்டிலும் குளுக்கோஸ் மீட்டர் 

இருக்க வேண்டியது அவசியம்.

மேலைநாடுகளில் உள்ள சர்க்கரை 

நோயாளிகள் 

'நான் சர்க்கரை நோயாளி' என்று பேட்ஜ் 

அணிந்திருப்பர். இது அவர்களுக்கு மயக்கம், 

தன்னிலை இழத்தல் போன்ற பாதிப்பு 

ஏற்படும்போது காப்பாற்ற உதவியாக இருக்கும். 

அதேபோல நாமும் பேட்ஜ் அணியலாம்" 

என்றார்.